Friday, August 4, 2017

விட்டலாபுரம் - ஸ்ரீ பிரேமிக விட்டலர் திருக்கோயில் / கண்ணுக்கினியன கண்டோம் - 41

விட்டலாபுரம்-ஸ்ரீ பிரேமிக விட்டலர் திருக்கோயில்

சென்னை கிழக்கு கடற்கரைச்சாலையில், கல்பாக்கம் புதுப்பட்டினம் அருகில் உள்ள சிறிய ஊர் விட்டலாபுரம். இங்கு பாண்டுரங்கன் கோவில் ப்ரசித்தம். விட்டலேஸ்வரர் கோவில் என்று சொல்கிறார்கள்.

சுமார் 500 வருடம் பழமைவாய்ந்த திருக்கோயில். கிருஷ்ண தேவராயரின் பிரதிநிதியான கொண்டைய தேவ சோழ மகாராஜா என்பவரால் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. திருவீதி வலம் வரத் தேர் ஒன்றும் ராஜாக்களால் பரிசாகக் கொடுக்கப்பட்டுள்ளது. சிதிலமாக இருந்த இக்கோயில் தற்போது ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி அவர்களால் சீரமைக்கப்பட்டு 
ம்ப்ரோக்ஷணம் செய்யப்பட்டுள்ளது. தொல்பொருள் இலாகா கட்டுப்பாட்டில் கோயில் உள்ளது. இக்கோவிலுக்கும், சதுரங்கப்பட்டினம் வரதராஜபெருமாள் கோவிலுக்கும் பாதாள வழி உள்ளதாகவும் சொல்கிறார்கள்.
த்வஜஸ்தம்பம், தாண்டி கருடாழ்வாரை ஸேவித்து, சன்னதி சென்றோம். மூலவர், விட்டலேஸ்வரர் என்னும் பிரேமிக விட்டலன், சுமார் 5 அடி உயரம் இருப்பார். இடுப்பில் கையை வைத்தபடி பாண்டுரங்கன் மிக அழகாக இருக்கிறார். பொதுவாக பாண்டுரங்கன் ருக்மிணித் தாயாருடன் மட்டுமே இருப்பார். ஆனால் இங்கு ருக்மணி ஸத்யபாமா ஸமேதராகக் காட்சி தருவது விசேஷம். உற்சவ மூர்த்திகளும் மிகுந்த அழகு. நாமசங்கீர்த்தனமே பிரதானம். இக்கோயிலில் பஜனை ஸம்ப்ரதாய பூஜை முறை மட்டுமே. மந்திரங்கள் சொல்லிப் பூஜை செய்வதில்லை. நம்மையும், ‘ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே’ என்று சொல்லச் சொல்கிறார்கள். தினசரி மாலையில் நாமசங்கீர்த்தனம் உண்டு.

தாயார் சந்தானலக்ஷ்மி தனிக்கோயில் நாச்சியார்.
சுற்றுப் ப்ராகாரத்தில் ஸ்ரீனிவாசப்பெருமாள், வரதராஜப்பெருமாள், ராமானுஜர் மற்றும் விஸ்வக்ஸேனர் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள். சக்கரதாழ்வார், அனுமார் சன்னதிகளும் உள்ளது. கோவில் எதிரிலேயே ஆஞ்சநேயருக்குத் தனி சன்னதியும் இருக்கிறது. 
சிறிய கோவிலாக இருந்தாலும் அழகாகவும், தூய்மையாகவும் இருக்கிறது. நந்தவனம் மிக நேர்த்தியாய்ப் பராமரிக்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு உள்ளூர் மக்களைவிட, வெளியூர் மக்களின் வருகை அதிகம்.

சிறிய கிராமம். அருகில் உள்ள தோட்டத்தில் விளையும் காய்கறிகளை கோவில் வாசலில் விற்கிறார்கள். அவர்கள் வாழ்வாதாரமே அதுதான் என்பதால் கள்ளங்கபடமற்ற சிறு குழந்தைகள் விற்கும் கீரை, காய்கறியை வேண்டாம் என்று சொல்ல மனம் வராது. அன்பான மக்கள். இதே கிராமத்தில் அருகிலேயே விசாலாக்ஷி ஸமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலும் உள்ளது.

உற்சவங்கள்: ஸ்ரீஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி போலவே, மஹாசிவராத்திரியும் கொண்டாடப்படுவது விசேஷம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7.30 to 10.30 மாலை 4.30 to 07.30

வழி:  இக்கோயில் கல்பாக்கத்திலிருந்து 3 கி.மி தொலைவில், புதுப்பட்டினம் நெரும்பூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது. கல்பாக்கத்திலிருந்து ஆட்டோ வசதியும் உண்டு. பாண்டிச்சேரியிலிருந்து கல்பாக்கம் செல்லும் வழியில் செல்லலாம்.

முகவரி: ஸ்ரீ பிரேமிக விட்டலர் திருக்கோயில்,
விட்டலாபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments:

Post a Comment